02nd June 2025 15:30:54 Hours
தென் கொரியாவின் குமியில் 2025 மே 27 முதல் 31 வரை நடைபெற்ற 26 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவ தடகள வீரர்கள் தமது சிறந்த திறமைகளை வெளிப்படுத்தினர்.
சர்வதேச அரங்கில் தங்கள் சிறந்த சாதனைகள் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்த்த ஐந்து பெண் மற்றும் ஆறு ஆண் தடகள வீரர்கள் இலங்கை இராணுவ அணியில் இடம்பெற்றனர். 2வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பணிநிலை சாஜன் ஆர். நதீஷா மற்றும் 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியின் பெண் சிப்பாய் எம்.எச்.ஜே. உத்தரா ஆகியோர் பெண்களுக்கான 4x400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.ஏ.எம்.ஆர். விஜேசூரிய 10,000 மீட்டர் ஓட்டத்தில் 6 வது இடத்தைப் பிடித்து இலங்கைக்கான புதிய சாதனையை படைத்துள்ளார். 2 (தொ) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II எச் எச் கே குமாரகே 400 மீட்டர் ஓட்டத்திலும் 4x400 மீட்டர் அஞ்சலோட்டத்திலும் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றார்.
2025 ஜூன் 01 அன்று இலங்கைக்குத் திரும்பியவர்களை இலங்கை இராணுவத்தின் விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.ஏ.டி.சி.ஆர். கன்னங்கரா ஆர்எஸ்பீ என்டிசீ மற்றும் விளையாட்டு பணிப்பகம் மற்றும் இராணுவ தடகளக் குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அன்புடன் வரவேற்றனர். விளையாட்டு வீரர்கள் தங்கள் அர்ப்பணிப்புக்காகவும், சர்வதேச தடகளத்தில் இராணுவத்தின் மற்றும் நாட்டின் நிலையை உயர்த்தியதற்காகவும் மிகவும் பாராட்டப்பட்டனர்.