09th April 2025 09:42:47 Hours
35 வருட கால சேவையின் பின்னர் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் கேஎம்என் குலசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஏப்ரல் 08 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் கேஎம்என் குலசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 1991 நவம்பர் 17 ஆம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி பாடநெறி 09 இல் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். அவர் ரத்மலான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், 1993 நவம்பர் 22 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் கெமுனு ஹேவா படையணியில் நியமிக்கப்பட்டார். பின்னர் அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்தப்பட்ட அவர் 2025 ஜனவரி 18 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 ஏப்ரல் 16 ஆம் திகதி தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
தனது பணிக்காலத்தில் அவர் 9 வது கெமுனு ஹேவா படையணியின் குழு தளபதி, 9 வது கெமுனு ஹேவா படையணியின் அதிகாரி கட்டளை, 1 வது மற்றும் 9 வது கெமுனு ஹேவா படையலகுகளின் அதிகாரி கட்டளை, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிலிளவல் அதிகாரி பிரிவில் அதிகாரி பயிற்றுவிப்பாளர், 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி 2 (பயிற்சி), கெமுனு ஹேவா படையணி நிலையத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி 2, ஹைட்டி ஐக்கிய நாடுகள் ஸ்திரப்படுத்தல் பணியில் (மினுஸ்டா) இலங்கை படையலகின் நிறைவேற்று அதிகாரி, 1 வது கெமுனு ஹேவா படையலகின் இரண்டாம் கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையக நடவடிக்கைகள் பணிப்பகத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), 1 வது கெமுனு ஹேவா படையலகின் கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையகத்தில் இராணுவச் செயலாளர் அலுவளக பணிநிலை அதிகாரி 1 (தொழில் திட்டமிடல் பிரிவு), மாலியில் ஐக்கிய நாடுகளின் பல பரிமானம் ஒருங்கிணைந்த நிலைப்படுத்தல் பணியில் பணிநிலை அதிகாரி, கெமுனு ஹேவா படையணி நிலையத்தில் பதில் நிலைய தளபதி, பயிற்சி பணிப்பகத்தில் கேணல் பயிற்சி (வெளிநாட்டு) மற்றும் 222 வது மற்றும் 122 வது காலாட் பிரிகேட்களில் பிரிகேட் தளபதி ஆகிய பதவிகளை வதித்துள்ளதுடன், தற்போது பாதுகாப்பு அமைச்சின் பதில் இராணுவ தொடர்பு அதிகாரியாக கடமையாற்றுகிறார்.
எதிரியை எதிர்கொள்வதில் அவர் காட்டிய துணிச்சலைப் பாராட்டி, சிரேஷ்ட அதிகாரிக்கு ரண விக்ரம பதக்கம் மற்றும் ரண சூர பதக்கம் (மூன்று முறை) ஆகியன வழங்கப்பட்டுள்ளன.
இந்த சிரேஷ்ட அதிகாரி தனது இராணுவ வாழ்க்கையில் அடிப்படை புலனாய்வு அதிகாரிகள் பாடநெறி, ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் ஆரம்ப பயிற்சி பாடநெறி மற்றும் இலங்கையில் இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, பாகிஸ்தானில் இளம் அதிகாரிகளின் தந்திரோபாய பாடநெறி, இந்தியாவில் படையலகு ஆதரவு ஆயுதங்கள் (அதிகாரிகள்) பாடநெறி, இந்தியாவில் கனிஷ்ட கட்டளை பாடநெறி மற்றும் இந்தியாவில் சிரேஷ்ட கட்டளை பாடநெறி ஆகிய ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை கற்றுள்ளார்.
சிரேஷ்ட அதிகாரி, இந்தியா தேவி அஹில்யா விஸ்வவித்யாலயாவிலிருந்து சிரேஷ்ட நிலை பாதுகாப்பு முகாமைத்துவ டிப்ளோமா, இலங்கையில் புவியியல் விஞ்ஞான தகவல் தொழில்நுட்ப (தனியார்) நிறுவனத்தில் அலுவலக தன்னியக்கமாக்கல் அமைப்பு டிப்ளோமா, இலங்கையில் திறன் மேம்பாட்டு நிதி நிறுவனத்தில் ஆங்கில டிப்ளோமா, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பாதுகாப்பு கற்கை) மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனிதவள முகாமைத்துவ முதுகலைப் பட்டம் உள்ளிட்ட உயர் கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளைப் பெற்றுள்ளார்.