Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th February 2025 18:04:48 Hours

புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி கடமைப் பொறுப்பேற்பு

இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக 2025 பெப்ரவரி 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில், அவரது எதிர்கால பதவிக்காலத்திற்கு ஆசிர்வாதங்கள் கோரப்பட்டதுடன், நிகழ்வுகள் ஆரம்பமாகின. பின்னர் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக அவர் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி கடமைகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி அலுவலகத்திற்குச் சென்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மற்றும் அனைத்து செயற்பாட்டுத் தளபதி (மேற்கு மாகாணம் & புத்தளம் மாவட்டம்) போன்ற சமீபத்திய முக்கிய நியமனங்கள் அவரது சிறப்புமிக்க பணிகளில் அடங்கும். இந்தப் பதவிகள் அவரது மூலோபாய மற்றும் செயல்பாட்டு நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியதுடன், புதிய பதவியில் சிறந்து விளங்க அவரைத் தயார்படுத்தியுள்ளன.

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை பணிநிலை அதிகாரிகள், பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர். இந்த குறிப்பிடத்தக்க பொறுப்பை அவர் ஏற்கும் போது, இராணுவத்திற்கான அவரது தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, அவர்கள் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.