15th July 2022 21:51:19 Hours
கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வெள்ளிக்கிழமை (15) முதல் இலங்கையின் பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே புதன்கிழமை (13) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்திற்கருகில் ஆர்பாட்டகாரர்களின் செயல்களினால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இராணுவ வீரர்களைப் பார்ப்பதற்காக கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் செய்தார்.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொழும்பு இராணுவ மருத்துவமனை வளாகத்தின் நுழைவாயிலில் புதிய பதில் ஜனாதிபதியை வரவேற்றனர்.
அங்கு, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளின் தளபதியாகவும், அதிமேதகு பதில் ஜனாதிபதி அவர்கள் இராணுவ வீரர்கள் சிகிச்சை பெற்று வரும் விடுதிக்கு சென்று காயமடைந்த இராணுவ வீரர்களின் நலம் விசாரித்தார்.
அங்கு, தலையில் வெட்டுக்காயங்கள் உட்பட பலத்த காயம் அடைந்த இராணுவ வீரர்கள் மற்றும் காயமடைந்த ஏனைய இராணுவ வீரர்களின் உடல்நிலை குறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அனைத்து அமைதியான இலங்கையர்களின் அரசியலமைப்பு உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்தை மனதில் கொண்டு தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் கடமைகளில் ஈடுபட்ட காயமடைந்த இராணுவத்தினர் விரைவில் குணமடைய வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.
இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் கிரிஷாந்த பெர்னாண்டோ, கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் பிரிகேடியர் ஜூட் பெரேரா மற்றும் இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர் கேணல் சமந்த குமாரகே ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.