11th September 2021 10:49:33 Hours
நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் திங்கட்கிழமை (13) நீக்கப்படுமென எதிர்பார்த்திருந்த நிலையில் நாட்டில் நிலவும் தொற்று நோய் பரவல் காரணமாக எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையில் நீடிக்குமாறு அறிவி்க்கப்பட்டுள்ள நிலையில் செப். 21 க்கு பின்னர் உரிய கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பதற்கு அவசியமான அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு சுகாதார துறையினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அதற்கமைய நாட்டை திறப்பதற்கு அவசுயமான வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டுமென பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ராஜகிரியவிலுள்ள கொவிட் -19 தடுப்பு செயலணியின் அலுவலகத்தில் இன்று (10) இடம்பெற்ற சந்திப்பின் போது அறிவுறுத்தினார்.
ஆரம்பத்தில் சூம் தொழில்நுட்பத்தின் மூலம் ஜெனரல் ஷவேந்திர சில்வா தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் நாட்டில் கொவிட்-19 தடுப்பு பணிகளின் முன்னேற்றங்கள், நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொவிட் – 19 தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடர்பிலும் எதிர்காலத்திலும் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பிலும் எடுத்துரைத்தார்.
அத்தோடு கடந்த சில நாட்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதோடு, தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்களே பெருமளவில் உயிரிழந்துள்ளனர் என்றும் தடுப்பூசி மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் சுமூகமாக இடம்பெறுவதால் வைத்தியசாலைகளுக்குள் நெரிசல் குறைவடைந்துள்ளதெனவும் தெரிவித்தார்.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஆகியோர் தலைமையில் வௌ்ளிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் இணையவழியூடாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உரையாற்றியதுடன் செயற்குழு மீளாய்வுகள், வைத்தியசாலைகளின் கொள்ளளவு, இடைநிலை சிகிச்சை மையங்கள், பொதுப் போக்குவரத்து செயற்பாடு, பாடசாலைகளை மீண்டும் திறத்தல், பிசிஆர் மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகள், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பெற்றுக்கொள்ள அவசியமான தடுப்பூசி வகைகள் என்பன தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது..