17th March 2023 20:10:55 Hours
12 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகளில் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிக்கான பரிசளிப்பு விழா வியாழக்கிழமை (மார்ச் 16) பனாகொடை இராணுவ உள்ளக உடற்பயிற்சி கூடத்தில் இடம்பெற்றது. இதில் இராணுவ விளையாட்டுக் குழுவின் தலைவரும், இராணுவ பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
முப்படையைச் சேர்ந்த 47 ஆண்களும் 37 பெண்களும் பங்குபற்றிய டெக்வாண்டோ போட்டிகள் மார்ச் 14 முதல் 16 வரை பனாகொடை இராணுவ உள்ளக உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்றது.
வருகை தந்த விளையாட்டுக் குழுவின் தலைவரும், இராணுவ பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும், இராணுவ டேக்வாண்டோ விளையாட்டுக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்கள் வரவேற்றார்.
வரவேற்பு உரையின் பின்னர், அனைத்து சிறப்பு விருந்தினர்களும் இலங்கை இராணுவத்தின் டேக்வாண்டோ அணி வீரர்களால் நடாத்தப்பட்ட போட்டிகளை கண்டுகளித்தனர்.
பின்னர், இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல மற்றும் இராணுவ டேக்வாண்டோ குழுவின் தலைவரும், இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க ஆகியோருடன் இணைந்து வெற்றியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
ஆடவர் பிரிவில் இலங்கை இராணுவ ஆண்கள் டேக்வாண்டோ அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்ததுடன், பெண்கள் பிரிவில் விமானப்படையின் பெண்கள் டேக்வாண்டோ அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
விமானப்படையின் முன்னணி விமானப் படை சிப்பாய் டீடிஎல் திலகரத்ன (சிறந்த ஆண் வீரர்) மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் வைகேஎம் மதுஷானி (சிறந்த பெண் வீராங்கனை) ஆகியோர் சுருக்கமான விழாவின் போது விருது பெற்றனர்.
பரிசளிப்பு விழாவின் இறுதியில், மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவுக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி பாராட்டினார்.
இலங்கை டேக்வாண்டோ சம்மேளனத்தின் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் மாஸ்டர் கி சு லீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
12வது பாதுகாப்பு சேவை டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் இலங்கை இராணுவ டேக்வாண்டோ குழுவின் தலைவரும், இராணுவ நிறைவேற்று பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இலங்கை இராணுவ டேக்வாண்டோ குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.