03rd January 2023 20:02:36 Hours
நாரஹேன்பிட்ட மெனிங் டவுனில் அமைந்துள்ள ‘செனெஹச’ கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் நிலையத்தின் நிருவாகிகள் குழு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இன்று (3) காலை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர். ‘செனெஹச’ கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் நிலையத்தின் பிரதம மேற்பார்வை அதிகாரியும் ரணவிரு சேவா அதிகாரசபையின் உப தலைவருமான திருமதி சோனியா கோட்டேகொட தலைமையிலான குழுவில் குழந்தை நரம்பியல் நிபுணர் டாக்டர் சராஜி விஜேசேகர, ஆசிரி சமூக வைத்திய நிபுணர் டாக்டர் ஹேவமலகே மற்றும் திறந்த பல்கலைகழகத்தின் டாக்டர் ஹர்ஷ துலாரி விஜேசேகர ஆகியோர் இருந்தனர்.
பாதுகாப்பு அமைச்சுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் ரணவிரு சேவா அதிகாரசபையால் ‘செனெஹச’ கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் நிலையம் நிர்வகிக்கப்படுகிறது. முப்படை அங்கத்தவர்களின் குழந்தைகளுக்காகவும், சிறப்புத் தேவைகளைக் கொண்ட பொலிங் குடும்பங்களுக்காகவும் உருவாக்கப்பட்ட ‘செனெஹச’ கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் நிலையம் அந்தக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் போது தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பயிற்சி மையமாக செயல்படுகிறது.
இராணுவத் தளபதியுடனான கலந்துரையாடலின் போது திருமதி சோனியா கோட்டேகொட மற்றும் குழுவினர் சிறுவர்களுக்கான இந்த விசேட பயிற்சி நிலையத்தின் செயற்பாட்டு அம்சங்கள், தற்போதைய நிலை, வழமையான திட்டங்கள் மற்றும் பயிற்சி தொகுதிகள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள், திட்டமிடப்பட்ட தேவைகள் ஆகியவற்றினை விளக்கமளித்தனர். மேலும் ‘செனெஹச’ கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் நிலையத்துடனான நீட்டிக்கப்பட்ட ஒத்துழைப்புக்காக அவர்கள் இராணுவத் தளபதிக்கு நன்றி தெரிவித்தனர்.
இராணுவத் தளபதி, ‘செனெஹச’ கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் நிலையத்தின் பெறுமதியான சேவையை அங்கீகரித்ததோடு, முப்படைகளின் உறுப்பினர்கள் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் விசேட தேவையுடைய சிறுவர்களின் சார்பாக சேவையாற்றும் நிபுணர்களின் பங்களிப்பையும் பாராட்டினார். எதிர்காலத்திலும் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவையும் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.
சுமுகமான கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி அவர்கள் வருகை தந்த குழுவினருக்கு பாராட்டுச் சின்னமாக நினைவுச் சின்னங்களை வழங்கினார். இந்த சந்திப்பில் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களும் கலந்துகொண்டார்.