Header

Sri Lanka Army

Defender of the Nation

27th October 2023 16:39:52 Hours

படையணிகளுக்கிடையிலான விளையாட்டு சாம்பியன்ஷிப் – 2023 சாதனைகளுக்கு பாராட்டு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ தலைமையில் வியாழக்கிழமை (ஒக்டோபர் 26) பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் ‘படையணிகளுக்கிடையிலான விளையாட்டு சாம்பியன்ஷிப்-2023’ இன் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

2023 ஆம் ஆண்டில், சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் மகளிரை தேர்ந்தெடுப்பதற்காக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு படையணிகளில் 40 ‘படையணிகளுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் திறமையான நபர்களை வளர்ப்பதை இலக்காகக் கொண்டு, இறுதியில் சர்வதேச மட்டத்தில் வெற்றிகளைப் பெறுவதற்கு இயலும் வகையில், இராணுவ விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகளின் தடகளத் திறன்களை மேம்படுத்துவதற்காக இந்த விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வளாகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதியை விளையாட்டுப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீ.ஏ.எம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். அதன்பிறகு, அன்றைய நிகழ்வின் முக்கியப் பகுதி ஆரம்பிப்பதற்கு முன், தகவல் தொழில்நுட்ப பணிப்பகம் மற்றும் ஊடக பணிப்பகம் இணைந்து, விளையாட்டு பணிப்பகத்தினரால் தயாரித்த இராணுவ விளையாட்டு இலத்திரனியல்-ஆல்பத்தை வெளியிட அவர் அழைக்கப்பட்டார். இராணுவ விளையாட்டு இலத்திரனியல்- ஆல்பம் இலங்கை இராணுவத்தின் அனைத்து விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளையும் உள்ளடக்கியுள்ளது.

வரவேற்புரையின் பின்னர், பதில் பதவி நிலை பிரதானியும் பிரதி பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சி.டி. ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களால் பல்வேறு நிகழ்வுகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

அடுத்து, சமீபத்தில் சீனா ஹாங்சோவில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சர்வதேச சாதனைகளை நிகழ்த்திய விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கான பண ஊக்குவிப்புகளுடன், ‘படையணிகளுக்கிடையிலான விளையாட்டு சாம்பியன்ஷிப்-2023’ இல் சாம்பியன் பட்டம் பெற்ற படையணிகளுக்கு வெற்றிகிண்ணங்கள் வழங்க இராணுவத் தளபதி அழைக்கப்பட்டார்.

பரிசளிப்பு நிகழ்வில் விளையாட்டுப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீ.ஏ.எம்.பீரிஸ் அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டமையைப் பாராட்டி இராணுவத் தளபதிக்கு விசேட நினைவுச் சின்னமொன்றை வழங்கினார்.

இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விருது வழங்கும் நிகழ்வை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.