16th September 2023 11:00:35 Hours
அரசாங்கத்தின் பணிப்புரைக்கு அமைவாக இராணுவத் தளபதியின் பணிப்புரையின் பேரில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் படையினரின் செயல்பாட்டுத் தேவைகளுக்காக இதுவரை பயன்படுத்தப்பட்ட கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் 1 ஏக்கர் 3 ரூட்ஸ் மற்றும் 10.52 பேர்ச்சஸ் கொண்ட காணியை வெள்ளிக்கிழமை (14 செப்டெம்பர் 2023) அன்று விடுவித்தார்.
குறித்த இடத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது காணிக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியினால் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி மத்திய கல்லூரி அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர், யாழ். தளபதி, பிரதி பொலிஸ் மா அதிபர், 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அதிபர் ஆகியோர் நிகழ்விடத்திற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து விழா ஆரம்பமானது. ஒரு சிறிய மத பிரார்த்தனை தொடர்ந்து இந் நிகழ்வு ஆரம்பமானது.
இந் நிகழ்வில் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.கே.என்.சி ஜயவர்த்தன ஆர்எஸ்பீ என்டிசி, கிளிநொச்சி பிரதி பொலிஸ் மா அதிபர் ஜே.எஸ் சமுத்திரஜீவ, 551, 552 மற்றும் 553 வது பிரிகேட் தளபதிகள், பிரதேச சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், கரைச்சி பிரதேச சபையின் செயலாளர், அதிபர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.