Header

Sri Lanka Army

Defender of the Nation

04th February 2022 12:53:32 Hours

எங்களுக்கு முன்னால் உள்ள சவால்களை வெற்றிகொள்ள மாற்றத்தை ஏற்படுத்துங்கள் – அதிமேதகு ஜனாதிபதி தெரிவிப்பு

"எம் முன்னிலையில் உள்ள சவால்களில் வெற்றியெய்து எமது வருங்காலக் குறிக்கோள்களை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்வதாயின் நாம் எல்லோரும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நம் எல்லோருக்கும் அதற்காகச் சில அர்ப்பணிப்புக்களைச் செய்ய நேரிடலாம். அதற்குத் தேவையான எடுத்துக்காட்டுதலைத் தருவதற்கு நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் நான் தயாராக இருக்கின்றேன். தற்போதும் நான் அதனை உச்சக்கட்டத்தில் செய்து கொண்டிருக்கின்றேன். எல்லா அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் ஆகிய அனைவரும் நாட்டுக்கு முன்மாதிரியாக எப்போதும் செயற்பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன். நீங்கள் மக்களுக்கு முன்மாதிரியாக நடந்துகொள்வீர்களாயின் நாட்டின் பெரும்பாலான மக்களும் உங்களைப் பின்பற்றுவார்கள்.

"தேசியத் தன்மையை மதிக்கும் நாட்டின் இறைமையைக் கட்டிக்காக்கும் தேசியத் தலைமைத்துவத்திற்கு எதிரான சக்திகள் மிகச் சூட்சமான பல பொய் பிரசாரங்களினூடாக மக்களைத் தவறான பாதையில் எடுத்துச் செல்ல முயல்கின்றது. அரசு எந்த விதமான மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுக்கவுமில்லை எதிர்காலத்தில் அதற்கு எதிர்காலத்தில் இடமளிக்கப் போவதுமில்லை.எந்த விதத்திலும் இந்த நாட்டில் அடிப்படைவாதம் தலைதூக்க இடமளிக்கபோவதிள்ளை. அரசினால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதியின் பிரகாரம் இன்று நாங்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம். நாங்கள் முன்வைத்த சுபீட்சத்தின் நோக்கு எனும் கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப் படுத்துவதற்காகவே மக்கள் தற்போதைய அரசுக்கு ஆதரவு வழங்கினார்கள் என்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

"ஜனாதிபதி ஆற்றிய முழு உரை பின்வறுமாறு

"இலங்கையிலும் 2500 ஆம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றில் பல காலப் பகுதிகளில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடிய துட்டகைமுனு, வலகம்பா, மகா பராக்கிரமபாகு, விஜயபாகு, ஆறாவது பராக்கிரமபாகு போன்ற சிறந்த மன்னர்கள் வெளிநாட்டவர்களிடமிருந்து நாட்டை மீட்டுக்கொண்டு நாட்டை ஒன்றுபடுத்தினார்கள்.இறுதியாக ஏறத்தாழ 450 ஆண்டு காலமாக இருந்து வந்த ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிகளிலிருந்து எமது நாடு சுதந்திரம் பெற்று தற்போது 74 ஆண்டுகள் கடந்துள்ளன. சுதந்திரத்தின் பின்னரும் கூட 3 தசாப்தங்களுக்குக் கிட்டிய காலத்தில் பயங்கரவாதச் செயற்பாடொன்றினூடாக இந்நாட்டை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்க முயன்றமைக்கு எதிராகப் போராடவும் எமக்கு நேர்ந்துவிட்டது.

"இன்று இலங்கையானது ஒரு சுதந்திரமான இறைமை பொருந்திய சனநாயக நாடாகும். நாம் அதன் அபிமானம் கொண்ட பிரஜைகளாவோம். வரலாறு பூராகவும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு எமது நாட்டிற்கு முழுச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் அர்ப்பணிப்புடன் முன்னின்ற நாட்டுப் பற்றுடையவர்கள் எல்லோருக்கும் நான் இவ்வேளையில் எனது மரியாதையைச் செலுத்துகின்றேன். இனம், மதம் என்ற எவ்விதப் பேதங்களுமின்றி ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும் இன்று நாட்டின் எப்பிரதேசத்திலும் சுதந்திரமாக, பாதுகாப்புடன் வாழும் உரிமையுண்டு. தாம் விரும்பும் மதத்தை வழிபடுவதற்கான சுதந்திரமும் உள்ளது. சுயாதீனமாக அபிப்பிராயங்களை கொள்வதற்கும், கருத்துக்களை வெளியிடுவதற்கும் சுதந்திரம் இருக்கின்றது. நாட்டினுள் முழுமையாக ஊடகச் சுதந்திரம் இருக்கின்றது. இலங்கைப் பிரஜைகள் பரிபூரணமாகச் சனநாயக முறையொன்றினூடாகத் தத்தமது மக்கள் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுப்பதற்கும், விரும்பியவர்கள் அரசியல் செயற்பாட்டினூடாக அரச ஆட்சியில் சம்பந்தப்படுவதற்கும் சுதந்திரம் இருக்கின்றது. இது எம் அனைவரினது மகிழ்ச்சிக்கும் அபிமானத்திற்கும் உரியதொரு காரணமாகும்.

"சுதந்திரம் மிக்க சனநாயக ரீதியிலான நாடொன்றின் மக்கள் என்ற வகையில் நாம் எல்லோருக்கும் சிறப்புரிமைகள் இருப்பதுபோன்று பொறுப்புக்களும் இருக்கின்றன.எல்லோரும் நாட்டிற்காகத் தமது பொறுப்புக்களை நிறைவேற்றும் போதுதான் கிடைத்த சுதந்திரத்தின் உச்சக்கட்டப் பயன் கிடைக்கும். பொறுப்புக்களை மறந்துவிட்டு உரிமைகளைப் பற்றி மட்டும் பேசுவது பொருத்தமாக இருக்காது.ஒரு நாட்டின் சுதந்திரமானது மிக அர்த்தமாக அமைவது, அந்த நாடானது சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய சகல அம்சங்களினாலும் வலுவடைந்த போதே ஆகும். அதற்காக முனைப்பாகப் பங்களிக்கும் சந்தர்ப்பம் அரசைப் போன்று மக்களுக்கும் உள்ளது.ஒரு நாட்டை உரிய திசையை நோக்கிக் கொண்டு செல்லும் போது அதற்காக நாட்டின் அனைவரினதும் உதவியையும் எதிர்பார்க்க முடியாது என்பதை நாம் அறிவோம். மாற்றமடையாதவர்களைப் பார்த்திருந்து நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக நாம் திட்டமிட்டுள்ளவைகளைக் கைவிடுவதற்கு நாம் தயாரில்லை. எமது நோக்கமானது நாடு சார்பில் சரியானதைச் செய்வதே தவிர எல்லோரையும் திருப்திப்படுத்துவதல்ல.

"எதிர்காலத்தை நற்சிந்தனையுடன் நோக்கும் ஆக்க முறையான சிந்தனையின் மூலம் மட்டும்தான் நாம் எமது வருங்காலப் பயணத்தில் வெற்றிபெற முடியும். வெற்றிகரமானதொரு பயணத்திற்கு வேண்டிய அர்ப்பணிப்புக்களைச் செய்தால் மட்டுமேதான் நாம் எதிர்கொள்கின்ற சவால்களை வெல்ல முடியும்.எதிர்மறையான சிந்தனையுடையவர்கள் உலகை மாற்றிவிட மாட்டார்கள். அவர்களுக்கு அதற்கான ஆற்றலும் இல்லை. ஒரு பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்காமல் விமர்சனம்மட்டும் செய்யும் பழக்க முள்ளவர்களுக்கு எதிர்காலத்தைப்பற்றிய நோக்கு இல்லை.ஒரு நாட்டின் தலைவருக்கு அநேகமான கஸ்டங்கள், அனர்த்தங்கள், பிரச்சினைகள் மற்றும் சவால்கள் என்பவற்றைத் தொடர்ந்து எதிர்கொள்ள நேரிடுகிறது. ஒரே நோக்கினை நோக்கி குழுவொன்றை வழிநடாத்துவது இலகுவானதல்ல. எவ்வளவு நல்லதான நோக்கம் சார்பாக இருப்பினும் நடைமுறையில் இருக்கின்ற திறமுறைகளை மாற்றுவது இலகுவானதல்ல. சில விடயங்களின் போது உள்நாட்டைப் போன்று அந்நிய சக்திகளும் எம்மை எதிர்த்து ஒன்று கூடுகின்றன. சிலவேளை உங்களது பக்கத்தில் நிகழும் செயல்கள் எல்லாம் உங்களுக்கெதிராக நடக்கும் சதியாகத் தோன்றும் சந்தர்ப்பங்களும் உள்ளது.மக்கள் தலைவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது இவ்வனைத்துப் பிரச்சினைகளையும் முகாமை செய்துகொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதே தவிர பிரச்சினைகளிலிருந்து தப்பியோடுவதல்ல. அதற்காகத் தேவையான ஆக்க முறையான உளப்பாங்கு எம்முள் இருக்கின்றது. நாடு எதிர்கொள்கின்ற எந்தவொரு சவாலையும் வெற்றி காண்பதற்காகத் தலைமைதாங்க நான் எப்பொழுதும் தயாராக இருக்கின்றேன்.

"உலகை மாற்றியதும், மாற்றுவதும் ஆக்க முறையான கருத்துக்களைக் கொண்டுள்ள, எதிர்காலம்பற்றி நற்கனவுகளைக் கண்டு அவற்றை அடைய முயன்றவர்களேதான். வரலாறு முழுவதிலிருந்தும் இது நமக்குத் தென்படுகிறது.முன்னேறிய ஒவ்வொரு நாட்டினதும் உயர்வுக்குக் காரணமானது யாதெனில், அந்நாட்டுத் தலைவருக்கும் மக்களுக்கும் இருக்கும் ஆக்க முறையான சிந்தனையே ஆகும்.புராதன காலத்தில் எமது மன்னர்கள் ருவன்வெலிசாய தூபி, ஜேத்தவனாராமய மற்றும் அபயகிரி போன்ற விசாலமான நிர்மாணிப்புக்களை அத்தகைய ஆக்கமுறையான சிந்தனைகளின் மூலம்தான் செய்தார்கள். மின்னேரிக் குளம், கலாவௌ குளம், பராக்கிரம சமுத்திரம் மற்றும் யோத எல போன்ற நிர்மாணிப்புக்களைச் செய்த தலைசிறந்ததொரு நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் அன்று எமக்கு இருந்தது. சீகிரியா போன்ற நகர நிர்மாணிப்புகள் இன்றும் உலகை ஆச்சரியப்படுத்துகின்றது. இலங்கை பண்டைய கால உலகின் பகிரங்கமானதொரு கப்பல் மையமாக இருந்தது. அன்று எமக்கு அப்படியானவற்றைச் செய்யும் இயலுமை இருந்திருந்தால் வருங்காலத்திலும் உலகுடன் போட்டியிடும் ஆற்றல் நமக்கு இருக்க வேண்டும்.அதற்கான இன்றியமையாத காரணியாக அமைவது நாம் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கைதான்.

"கஸ்டகாலங்கள் எப்போதும் அதேபோல் இருப்பதில்லை. கஸ்டகாலங்களை எதிர்கொள்வதற்காகச் சக்திவாய்ந்த மனிதர்கள் தேவைப்படுவார்கள். அதனால் மற்றவர்களை உளரீதியாக வீழ்த்துகின்ற ஒவ்வொருவரும் இவ்வேளையில் சமூகத்திற்காகச் செய்வது உதவியல்ல. அதனால் இப்பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தேவைப்படும் ஆக்க முறையான சிந்தனையை நாட்டில் ஏற்படுத்துவதற்கு நாம் எல்லோரும் பெரும் பொறுப்புடையவர்களாக உள்ளோம்.அண்மைக்கால வரலாற்றில் நாம் பாரதூரமான பிரச்சினைகளை எதிர்கொண்டு அவற்றிற்கான தீர்வுகளைக் கண்டுள்ளோம். பயங்கரவாதத்தை ஒருபோதும் போரினால் தோற்கடிக்க முடியாதென்று அன்று பூரண எதிர்மறைச் சிந்தனையை கொண்டுள்ளவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தபோது, ஜெனரல் டென்சில் கொபேகடுவ, ஜெனரல் விஜய விமலரத்ன போன்ற வீர இராணுவத் தலைவர்கள் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியுமென்ற ஆக்கமுறையான சிந்தனையை அவர்களின் கீழ் போராடிக் கொண்டிருந்த இராணுவ உத்தியோகத்தருக்குள் ஊடுருவச் செய்தனர். பிற்காலத்தில் சீரான அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் சுமார் மூன்றரை ஆண்டளவான குறுகிய காலத்தினுள் பயங்கரவாதத்தை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதற்காக எமது ஆற்றல்களைபற்றி வைத்திருந்த நம்பிக்கையே காரணமானது.

"நாம் தற்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எதுவும் நீண்டகாலப் பிரச்சினைகள் அல்ல. ஆக்கமுறையுடன் கூடிய ஓர் அணுகு முறையினூடாக எமக்கு இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தேடிக்கொள்ள முடியும். ஆயினும் அந்த வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்திக் கொள்வதற்காக நாம் அனைவரும் செய்ய வேண்டியதொரு வேலைப்பகுதி உள்ளது. தத்தமது பொறுப்பை உரியவாறு நிறைவேற்றுவதன் மூலம் நாம் அனைவரும் நாடு சார்பாக எமது உச்சக்கட்டப் பங்களிப்பை வழங்க முயல வேண்டும்.

"கொவிட் 19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு தடுப்பூசி ஏற்றுதல் என்பதை நாங்கள் நேர காலத்தில் புரிந்து கொண்டோம். அதற்கமைய இலக்கிடப்பட்ட சனத்தொகையின் 85மூ க்கும் மேலான எண்ணிக்கையினருக்கு 1ஆம், 2ஆம் தடுப்பூசிகளை ஏற்றி நோய் நிலைமையினைக் கட்டுப்படுத்தி வழமையான மக்கள் வாழ்வை மீண்டும் தொடங்க எம்மால் முடியுமானது. இவ்வேளை ஆகும்போது மக்களுக்கு மூன்றாம் தடுப்பூசியையும் வழங்குவதற்குத் தேவையான தடுப்பூசி மருந்துகள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான காரணங்களைத் தேடிக்கொண்டு பல வருடங்கள்பின் செல்வதைவிட அதற்கான குறுகியகால, அத்துடன் நீண்டகால தீர்வுகளைக் கண்டறிவதே காலோசிதமானதாகும். ஓர் அரசு என்ற வகையில் நாம் அதன்மீது கவனத்தைச் செலுத்தியுள்ளோம். இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதென்றால் நாம் கமத்தொழில், கைத்தொழில் மற்றும் சேவைகள் ஆகிய மூன்று பிரிவுகளையும் முன்னேற்ற வேண்டும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் அதேவேளையில் ஏற்றுமதி வருமானத்தைக் கூட்டிக் கொள்ளக்கூடிய வழிகளின்மீது விசேட கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பான எமது தேசியக் கொள்கைகள் மிகவும் தெளிவானதாக இருப்பினும் அவற்றைச் செயற்படுத்தும்போது இதைவிட செயற்பாட்டு ரீதியான பங்களிப்பு ஒவ்வொரு துறையிலும் இருத்தல் வேண்டும்.

"எமது நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளின்போது முதலீடுகள் முக்கிய காரணியொன்றாகும்.முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு அரசு எப்பொழுதும் நடவடிக்கை எடுப்பதுடன், எமக்கு உள்நாட்டு முதலீடுகளைப் போலசர்வதேச முதலீடுகளும் அவசியமாகும். விசேடமாகப் பாரிய அளவிலான கருத்திட்டங்கள், நவீன தெழில்நுட்ப அறிவு தேவைப்படும் கைத்தொழில்கள், உலகச் சந்தைக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும் புதிய வியாபரங்களுக்கு சர்வதேச முதலீடுகள் தேவைப்படுகின்றது. அதற்காக அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிராகத் தவறான அபிப்பிராயங்களை மக்களிடம் கொண்டு செல்லும் தரப்பினர்பற்றி மக்கள் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும். தொழில் முயற்சியை ஊக்குவிக்காது, தொழில் முயற்சியாளர்களுக்கு உள்ள தடைகளை அகற்றாது எம்மால் பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்த முடியாது. பல ஆபத்துக்களின் மத்தியில் தன்னுடையதே என்று தொழிலொன்றை ஆரம்பித்து பிறருக்கு தொழில்களையும், வருமானம் ஈட்டும் வாய்ப்பையும் அளிக்கின்ற தொழில் முயற்சியாளர்களை இதைவிட மதிப்புடனும், நட்புறவோடும் கவனிக்கும் பொறுப்பு எம்மைச் சார்ந்துள்ளது. நாட்டினது அபிவிருத்தியில் உள்ள தொழில் முயற்சியாளர்களின் பங்களிப்பினை நன்கு உணர்ந்துகொண்டு இருக்கின்ற சட்டரீதியான சட்டடத்திற்குட்பட்டு அவர்களுக்கு வேண்டிய சகல உதவிகளையும் துரிதமாக வழங்க அரச உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். தொழில்களைப் பதிவுசெய்யும்போதும், முதலீடுகளுக்காக அங்கீகாரங்களை வழங்கும்போதும் ஏற்படும் பெரும் தாமதங்களை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதனூடாக நாட்டின் முழுமொத்தப் பொருளாதாரச் செயற்பாட்டினைச் செயலாக்கப்படுத்த முடியும்.மிகவும் பயனுறுதியான ஒரு பிரசையை உருவாக்குவதற்காகப் பல முறையான கல்வித் திருத்தங்கள் இப்போது நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பாடசாலைக் கல்வியை முடித்துவிடும் ஒவ்வொரு பிள்ளையும் நாட்டின் பொருளாதாரச் செயற்பாட்டில் பங்களிக்கக்கூடிய தொழிலையோ அல்லது கைத்தொழிலையோ பயிலவேண்டும். தாம் தெரிந்துகொண்ட துறையில் தனது அறிவினை கூட்டிக் கொள்வது போன்று, முடியுமானால் தொழில்சார் தகைமைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் முயற்சிக்க வேண்டும். அதனுடாக நாட்டின் பொருளாதாரச் செயற்பாட்டில் நேரடியாகப் பங்களிப்புச் செய்யும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கின்றது.

"விவசாயப் பண்ணையில் தொழிற்சாலையில், வேலைத்தலமொன்றில் வியர்வை சிந்தி வேலை செய்யும் மக்கள் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடிப் பங்களிப்பை வழங்குகின்றனர். அவர்கள் எல்லோரையும் நான் கௌரவிக்கின்றேன்.நாட்டிற்கு அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் எமக்குப் பெரிய வளமாக இருக்கின்றார்கள். கடந்த காலத்தில் அவர்கள் நாட்டிற்காக முன்வந்து பெரும் அர்ப்பணிப்புக்களைச் செய்து எமக்கு ஒத்துழைப்பு நல்கியதை நாம் மறக்கவில்லை. அவர்கள் தொடர்ந்தும் எமது பொருளாதாரத்திற்காகத் தொடர்ந்து வழங்கும் பலம் மிகவும் பாராட்டத்தக்கதாகும். வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் எல்லோரையும் பிறந்த நாட்டில் முதலீடுகளைச் செய்யுமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன். அதன்மூலம் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக மேலும் செயலாக்க முறையில் பங்களிக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது.

"எம் முன்னிலையில் உள்ள சவால்களில் வெற்றியெய்தி எமது வருங்காலக் குறிக்கோள்களை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்வதாயின் நாம் எல்லோரும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நம் எல்லோருக்கும் அதற்காகச் சில அர்ப்பணிப்புக்களைச் செய்யநேரிடலாம். அதற்குத் தேவையான எடுத்துக்காட்டுதலைத் தருவதற்கு நாட்டின் சனாதிபதி என்ற வகையில் நான் தயாராக இருக்கின்றேன். தற்போதும் நான் அதனை உச்சக்கட்டத்தில் செய்து கொண்டிருக்கின்றேன். எல்லா அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் ஆகிய அனைவரும் நாட்டுக்கு முன்மாதிரியாக எப்போதும் செயற்பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன். நீங்கள் மக்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வீர்களாயின் நாட்டின் பெரும்பாலான மக்களும் உங்களைப் பின்பற்றுவார்கள்.

"தேசியத் தன்மையை மதிக்கும் நாட்டின் இறைமையைக் கட்டிக்காக்கும் தேசியத் தலைமைத்துவத்திற்கு எதிரான சக்திகள் மிகச் சூட்சுமமான பல பொய் பிரசாரங்களினூடாக மக்களைத் தவறான பாதையில் எடுத்துச் செல்ல முயல்கின்றது. எப்போதும் மதிநுட்பத்துடன் நடந்து கொள்ளுமாறு இந்நாட்டு மக்களை நான் கேட்டுக் கொள்கின்றேன். தரவுகளின் அடிப்படையில் விடயங்களை ஆராய்ந்துபார்த்து உண்மையை இனமறிந்து கொண்டு தீர்மானங்களை எடுப்பதாயின் ஒருவராலும் மக்களை தவறான பாதையில் கொண்டுசெல்ல முடியாது.எதிர்காலச் சந்ததிக்காக வென்றெடுத்த சுதந்திரத்தை எப்பொழுதும் பாதுகாப்பேன் என்றும் எமது நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறைமையைப் பாதுகாப்பேன் என்றும் அரச தலைவர் என்ற வகையில் நான் உறுதியளித்துள்ளேன். நாங்கள் எப்பொழுதும் அந்த உறுதியுரையை பாதுகாப்போம்.கலாசாரச் சுதந்திரம் ஒவ்வொரு இனத்திற்கும் முக்கியமானது. ஆயிரம் வருடகால வரலாற்றைக்கொண்ட பாரம்பரிய சம்பிரதாயங்கள், விழுமியங்கள் மற்றும் எமது பண்புகளைப் பாதுகாத்தல் என்பவற்றை எமது அடிப்படைப் பொறுப்பாகக் கருதுகின்றோம். கடந்தகாலத்தில் பல அச்சுறுத்தல்களுக்குள்ளாகி அழிந்துகொண்டிருந்த தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களைப் பாதுகாத்து அவற்றை மேம்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

"எமது நாடு சட்ட ஆதிக்கத்தைப் பாதுகாக்கும், சர்வதேச சமவாயங்களை மதிக்கும் நடொன்றாகும். குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இலங்கைக்குப் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சார்த்துவதற்கு ஏதேனுமொரு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டபோதும் எவ்விதத்திலுமான மனிதஉரிமை மீறல்களுக்கு அரசு உடந்தையாக இருக்கவில்லை என்பதுடன், எதிர்காலத்திலும் அத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது.எந்தக் காரணத்தைக்கொண்டும் மீண்டும் இந்நாட்டில் அடிப்படைவாதம் தலைதூக்க நாம் இடம் கொடுக்கமாட்டோம். அரசு மக்களுக்கு உறுதியளித்த அதேவிதத்தில் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம்.நாங்கள் முன்வைத்த சுபீட்சத்தின் நோக்கு எனும் கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவே மக்கள் தற்போதைய அரசுக்கு ஆதரவு வழங்கினார்கள்.நாங்கள் முன்வைத்த கொள்கைச் சட்டகத்தில் பசுமைக் கைத்தொழில் புதுப்பிக்கத்தக்க சக்திப் பயன்பாட்டு மேம்பாடு புதிய உலகத்திற்கேற்ற கல்வித் திருத்தங்கள் தேசியத் தொழில் முயற்சியாண்மையை ஊக்குவித்தல் ஏற்றுமதி பல்வகைத்தன்மை மற்றும் பெறுமானத்தை அதிகரித்தல் பொருளாதாரத்தின் புதியதொரு பாய்ச்சலுக்காகத் தொழில்நுட்பப் பாவனையைப் பரவலாக்கல்போன்ற நாம் இனமறிந்து கொண்ட முன்னுரிமைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.பயனான ஒரு பிரசை, மகிழ்ச்சியுடன் வாழும் குடும்பம், ஒழுக்கமான குணநெறிகளைக்கொண்ட சமூகம் மற்றும் சுபீட்சத்தின் நோக்கு ஆகிய ஆரம்பக்கட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.

"மிகவும் கஸ்டமானதொரு சந்தர்ப்பத்தில்தான் எனக்கு நாட்டின் தலைமைத்துவம் அளிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளினுள் எதிர்பாராத பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண நேரிட்டது. அவ்வனைத்து கஸ்டங்களுக்கும் மத்தியில் பல அபிவிருத்தித் திட்டங்கள் எமது அரசினால் மேற்கொள்ளப்பட்டது.எனது எஞ்சிய பதவிக் காலத்தினுள் நாட்டின் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குத் தேவையான திட்டங்களெல்லாம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எந்தளவு தடைகள் வந்தாலும் எமது நாட்டின் பெரும்பான்மை மக்கள் எதிர்காலத்தை ஆக்க முறையுடன் நோக்கி தமது தகுந்த பங்களிப்பை வழங்கினால் எம்மால் அந்நோக்கங்களை நிறைவேற்ற முடியுமானதாகவிருக்கும்.

"சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை எய்திய அபிமானம் மிக்க தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்று சேருமாறு அனைத்து நாட்டுப் பற்றுள்ள இலங்கையர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.

"உங்கள் அனைவருக்கும் நன்றி.