02nd June 2021 16:15:14 Hours
இன்று காலை (02) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,877 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருகின்றமை இனங்காணப்பட்டது. அவர்களில் 31 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர் என்பதுடன் ஒருவர் வெளிநாட்டவர் ஏனைய 2,845 பேரும் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் அவர்களில் அதிகமான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் அறியப்பட்டுள்ளதுடன், அறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 654 ஆகும். கொழும்பு மாவட்டத்தில் 646 தொற்றாளர்களும் களுத்துறை மாவட்டத்தில் 281 பேரும் அறியப்பட்டுள்ளனர். 1,264 பேர் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் அறியப்பட்டுள்ளனர் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இன்று காலை (02) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 189,240 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 91,964 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்கள்.
இன்று (02) காலை 0600 வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 1,631 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறினர். இன்று (02) பதிவாகிய ஒரு மரணத்துடன் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,527 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று (02) வரையில் ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 52 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3,450 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (02) காலை 0600 வரையான காலப்பகுதியில் 18 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 499 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர்.
மேலும் இன்று (02) காலை இவ் அறிக்கை வெளியிடப்பட்ட வேளையில் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் பிரிவுகள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், பயணத்தடையானது மீள் அறிவிப்பு வரையில் நீடிக்கும்.