31st May 2021 18:50:39 Hours
இன்று காலை (01) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,912 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருகின்றமை இனங்காணப்பட்டது. அவர்களில் 28 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர் என்பதுடன் இருவர் வெளிநாட்டவர் ஏனைய 2,882 பேரும் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் அவர்களில் அதிகமான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் அறியப்பட்டுள்ளதுடன், அறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 490 ஆகும். கம்பஹா மாவட்டத்தில் 322 தொற்றாளர்களும் கண்டி மாவட்டத்தில் 261 பேரும் அறியப்பட்டுள்ளனர். 1,809 பேர் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் அறியப்பட்டுள்ளனர் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இன்று காலை (01) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 186,363 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 89,119 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்கள்.
இன்று (01) காலை 0600 வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 1,915 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறினர். இன்று (01) காலை 0600 வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கைக்குள் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 04 ஆகும். அதன்படி இன்று (01) காலை வரையில் நாட்டில் பதிவான மொத்த கொவிட் – 19 மரணங்களின் எண்ணிக்கை 1,487 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று (01) வரையில் ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 56 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3,622 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (01) காலை 0600 வரையான காலப்பகுதியில் 14 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 403 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர்.
மேலும் இன்று (01) காலை இவ் அறிக்கை வெளியிடப்பட்ட வேளையில் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் பிரிவுகள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், பயணத்தடையானது மீள் அறிவிப்பு வரையில் நீடிக்கும்.