Header

Sri Lanka Army

Defender of the Nation

11th January 2025 09:24:23 Hours

இராணுவத் தளபதி கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம்

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப் என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் ஜனவரி 10, 2025 அன்று கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த, தளபதியின் வாகன தொடரணிக்கு மரியதை வழங்கப்பட்டதை தொடர்ந்து, இராணுவ சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் டபிள்யூஎச்யூடி விஜேரத்ன அவர்களுடன், இராணுவ வைத்தியசாலையின் முகாமைத்துவ மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்எம்ஜேபி ரத்நாயக்க ஆர்எஸ்பீ, கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்எம்எம் மொனராகல யூஎஸ்பீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

இவ் விஜயத்தின் போது, தளபதி வைத்தியசாலையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு உரையாற்றியதுடன், அதன் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். மேலும் சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற போர் வீரர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்துடன், அவர்கள் மிக உயர்ந்த தரமான பராமரிப்பைப் பெறுவதை உறுதி செய்தார். தரமான சுகாதார சேவைகளை வழங்குவதில் குழுப்பணி மற்றும் செயல்திறனின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், வைத்தியசாலை ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறைக்கு பாராட்டு தெரிவித்துடன் வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

தனது உரையைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி வைத்தியசாலை வளாகத்தை ஆய்வு செய்துடன் இதில் வார்டுகள் 05, 09, 14, 15, 17, வெளிநோயாளர் பிரிவு, மருந்தகம், வைத்தியசாலை உலர்உணவு களஞ்சியம், சிற்றுண்டிச்சாலை, சலவை பிரிவு, உள்ளூர் கொள்முதல் பிரிவு ஆகியவற்றினையும் மேலும் வைத்தியசாலை மற்றும் உயிரி மருத்துவப் பட்டறைக்கான வசதிகளை விரிவுபடுத்துவதற்காக கட்டுமானத்தில் உள்ள 15 மாடி கட்டிடத்தையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர், இராணுவத் தளபதி தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதுடன் அங்கு அவர் வைத்தியசாலையின் அனைத்து நிலைகளுடனும் உரையாடினார். வருகையின் நிறைவாக இராணுவ வைத்தியசாலைக்கு வருகை தந்ததைக் குறிக்கும் வகையில் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.