19th December 2024 14:37:06 Hours
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் 2024 டிசம்பர் 11 அன்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் அங்கவீனமுற்ற படைவீரர்களின் நன்மைகள் மற்றும் சலுகைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் இணைந்து கொண்டார். மேலதிக பாதுகாப்பு செயலாளர், ரணவிரு சேவா அதிகாரசபை தலைவர் மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது, சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான உறுதியான பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு பிரத்தியேக சபையொன்றை நியமிக்குமாறு பிரதியமைச்சர் பணிப்புரைவிடுத்தார். புதிதாக அமைக்கப்பட்ட இந்த அதிகார சபையின் தலைவராக மேலதிக பாதுகாப்பு செயலாளர் நியமிக்கப்பட்டார், இதில் ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர், தொடர்புடைய முப்படை பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய முக்கிய அதிகாரிகளும் அடங்குவர்.
மேலும் சம்பந்தப்பட்ட நபர்களின் நலனை பாதுகாக்கும் நோக்குடன் நிர்வாகப் பணிகளை திறம்பட நிறைவேற்றுவதை உறுதி செய்ய பாதுகாப்புச் செயலாளர் அமைச்சின் பணியாளர்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்களையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊனமுற்ற படைவீரர்களின் நலனை உறுதி செய்வதற்கும் அவர்களின் தேவைகளை கட்டமைக்கப்பட்ட மற்றும் கூட்டு அணுகுமுறையின் மூலம் திறம்பட நிவர்த்தி செய்வதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி எடுத்துக் காட்டுகின்றது.
(கட்டுரை மற்றும் புகைப்படம்: பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு)