20th March 2026
கொழும்பு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர், ஹோர்டன் சமவெளிப் பகுதியில் உள்ள ‘உலக முடிவு’ என்ற இடத்திலிருந்து தவறி விழுந்தது குறித்து நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் பொலிஸ் அத்தியட்சகரிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இலங்கை இராணுவ படையினர் 2026 மார்ச் 19 அன்று உடனடியாக மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர்.
114 வது காலாட் பிரிகேட் பிரிகேட் தனது 3வது சிங்க படையணி மற்றும் 3வது கமாண்டோ படையணி படையினரை கொண்ட ஒரு மீட்பு குழுவை களமிறக்கியது.
குழுவினர் 45 நிமிடங்களுக்குள் அந்த சம்பவ இடத்தை அடைந்தனர். அந்த இடத்திற்குச் செல்லும் பாதை, குறுகலான மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டிருந்ததால், பயணம் மிகவும் சவாலானதாக இருந்தது. மீட்புக் குழுவினர், ‘உலக முடிவு' நுழைவாயிலிலிருந்து காட்சி முனை வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றனர். அதன்பிறகு, இராணுவ வீரர்கள் கயிறுகளைப் பயன்படுத்தி 100 அடிக்கும் மேலான செங்குத்தான பாறையின் கீழே இறங்கி, காயமடைந்த மாணவரைக் கண்டுபிடித்து அவரை மீட்டெடுத்தனர்.
அவரை வெற்றிகரமாக மீட்ட பிறகு, படைவீரர்கள் அவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் மீண்டும் நுழைவாயிலுக்குத் தூக்கிச் சென்றனர். பின்னர் அவர் 1990 அவசரகால ஆம்புலன்ஸ் சேவையிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.