சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் 80 வது மாநாடு நிறைவு

கொழும்பு கிராண்ட் மைட்லேண்ட் விடுதியில் இன்று (மே 23) இடம்பெற்ற இராணுவ விளையாட்டு பேரவையின் பொதுச் சபை மற்றும் 80 வது மாநாட்டின் நிறைவு விழாவிற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) அவர்கள் தலைமை தாங்கினார்.

மே 19 திகதி ஆரம்பித்த இந்த சர்வதேச நிகழ்வில், இராணுவ விளையாட்டுத் தலைவர்கள் மற்றும் சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து இராணுவ விளையாட்டுகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடினர்.

பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி, குழு தலைவராக பணியாற்றும் இராணுவத் தளபதி, துணைத் தலைவர்களாக கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் நிறைவு விழாவில் கலந்து கொண்டனர்.

நிறைவு உரையை சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் தலைவர் கேணல் நில்டன் கோமஸ் நிகழ்த்தினார். விழாவில் தேசிய மற்றும் சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் கொடிகள் இறக்கிவைக்கப்பட்டதுடன், அதனுடன் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. பாதுகாப்புச் செயலாளருக்கு சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் தலைவரினால் சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் தகுதிக்கான ஆணை விருதும் வழங்கப்பட்டது. மேலும் சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் கொடி அடுத்த இந்நிகழ்வை நடத்தும் நாட்டிற்கு சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் தனது உரையில், இலங்கை முதன்முறையாக இந்த நிகழ்வை நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இது நாட்டிற்கு ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது. சர்வதேச பிரதிநிதிகளின் பங்கேற்பு, நட்புறவு மற்றும் சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் நல்லெண்ணத்தை இலங்கைக்கு கொண்டு வந்ததற்காக அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

தனது உரையை முடித்து, பாதுகாப்புச் செயலாளர் 80வது சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் பொதுச் சபை மற்றும் மாநாடு நிறைவடைந்ததாக முறையாக அறிவித்தார்.

இந்த விழாவில் இலங்கையின் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா உட்பட 80 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

(கட்டுரை: www.defence.lk)