இந்தியாவில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டிற்கான ஐ.நா. படை பங்களிப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இராணுவத் தளபதி பங்கேற்பு

ஐக்கிய நாடுகள் சபையின் படை பங்களிப்பு நாடுகளின் தலைவர்களுக்கான மாநாடு 2025, இந்தியா புதுதில்லியில் 2025 ஒக்டோபர் 14 முதல் 16 ஆம் திகதி வரை இந்தியா இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில், உலகில் உள்ள சிரேஷ்ட இராணுவத் தளபதிகளை ஒன்றிணைத்து ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த மாநாடு சிரேஷ்ட இராணுவ தளபதிகள் மற்றும் படையினரை வழங்கும் 32 நாடுகளின் பிரதிநிதிகளிடையே கலந்துரையாடலை மேற்கொள்ளும் ஒரு முக்கிய தளமாக அமைந்தது.

இலங்கை இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எம்.கே.டி.பீ. மாபலகம பீஎஸ்சீ அவர்கள் இலங்கை பிரதிநிதிகளின் ஒருவராக இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.