17th September 2021 13:24:16 Hours
நாடளாவிய ரீதியில் அழுலாக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் செவ்வாய்க்கிழமை (21) நிறைவடையுமென எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இளையோர் 15 – 19 வயதுகளுக்கிடையிலான தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக 2021 ஒக்டோபர் 1 (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.00 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதென வெள்ளிக்கிழமை (17) பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்தி சில்வா அவர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கையூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற கொவிட் - 19 தடுப்புச் செயலணியின் கலந்துரையாடலின் போது அத்தியவசிய சேவைகள், மோட்டார் வாகன மற்றும் காணிப்பதிவு திணைக்களம் என்பவற்றின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டதோடு 15 - 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மருந்தகங்கள், விவசாயம், ஆடை மற்றும் ஏற்றுமதி துறை, பொருளாதார மையங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் வழமை போல் இடம்பெறும் என்பதுடன், இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சுகாதாரத் துறையின் ஒருங்கிணைந்து இதுவரை தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுமெனவும் மேலும் தெரிவித்தார்.