Header

Sri Lanka Army

Defender of the Nation

12th June 2022 15:21:32 Hours

விமானப்படைத் தளபதி புதிய இராணுவத் தளபதியை அன்புடன் வரவேற்றார்

24 வது இராணுவத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வியாழக்கிழமை (9) இலங்கை விமானப்படைத் தலைமையகத்திற்கு தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டதுடன், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவை சந்தித்தார்.

விமானப்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை கொழும்பு இலங்கை விமானப்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் தில்ஷான் வசகே வரவேற்றதோடு இராணுவ மரபுகளுக்கு அமைவாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் அவருக்கு அளிக்கப்பட்டது. பின்னர் அணிவகுப்புத் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் சிறப்பு மேடையில் இருந்து அணிவகுப்பினை பரிசீலனை செய்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் வருகை தந்த இராணுவத் தளபதியை வரவேற்றதுடன், தனது முகாமைத்துவ அதிகாரிகள் சபையை அன்றைய பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர், குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் அன்றைய பிரதம விருந்தினர் கலந்துகொண்டார்.

எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன அவர்கள் இரு பிரிவினைருடனும் நிலவும் நல்லுறவுகளைப் பற்றிப் பேசியதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்த வரையில் நெருங்கிய உறவுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். புதிய இராணுவத் தளபதியும் அவருடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், விருந்தோம்பலுக்கு நன்றியும் தெரிவித்தார்.

விமானப்படைத் தளபதி புதிய இராணுவத் தளபதிக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன், இருவருக்குமிடையில் விசேட நினைவுச் சின்னங்களும் பரிமாரப்பட்டன. இறுதியில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தனது எண்ணங்களை அதிதிகள் புத்தகத்தில் பதிவிட்டார்.