30th April 2022 19:40:52 Hours
இராணுவம் மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 39 மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பை தொடர்வதற்கு ஆதரவளிக்கும் வகையிலான் நிதி உதவிகளை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (27) கொஸ்கம சாலாவ இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின், பிரதம அதிதியாக கலந்துகொண்ட இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களினால் இராணுவ மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 39 மாணவ மாணவிகளுக்கு தலா 50,000/= நிதி உதவி வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவானவர்களின் பட்டப் படிப்பை தொடர்வதற்கு ஊக்கமளிக்கும் வகையில் மேற்படி நிதி உதவிகள் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவத் தொண்டர் படையணி மற்றும் இலங்கை தேசிய காப்புறுதிக் கூட்டுத்தாபனம் இணைந்து நிர்வகிக்கும் ‘விருசவிய’ காப்புறுதித் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நிதியத்தினூடாக மேற்படி உதவிகள் வழங்கப்பட்டன.
போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் இந்நிகழ்வில் பெரிதும் பயன்பெற்றிருந்ததோடு, இராணுவ தொண்டர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அழைப்பாளர்கள் , பயனாளிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.