20th April 2022 19:52:13 Hours
புத்தாண்டினை முன்னிட்டு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62 வது படைப்பிரிவினர் செவ்வாய்க்கிழமை (12) மருதோடை, வெஹரதென்ன, கெபத்திகொல்லேவ, ஹொரவபத்தனை, சம்பத்நுவர, கஜபாபுர, எதாவெதுட்டுனுவெவ மற்றும் சிங்கபுர ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 1000 குடும்பங்களுக்கு நிதியுதவிகளை வழங்கினர்.
'தியாகி' அறக்கட்டளையின் ஸ்தாபகரும் தலைவருமான திரு வாமதேவ தியாகேந்திரன் வழங்கிய அனுசரணையினால் அந்தந்த கிராம பகுதிகளில் இருக்கும் கிராம சேவை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து படையினரின் ஒருங்கிணைப்பின் கீழ் மேற்படி பிரதேசங்களில் உள்ள 1000 குடும்பங்களுக்கு தலா 2000/= பணம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நன்கொடை வழங்கல் நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு தலா ரூ. 2000/=. நன்கொடையாக வழங்கி வைத்தார்.
நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இந்த மாபெரும் திட்டத்தில் பங்கேற்றனர். அதேவேளை, அனுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகம மற்றும் தந்திரிமலை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய அதே நன்கொடை நிகழ்ச்சி திங்கட்கிழமை (11) ஆரம்பமானது. வன்னி பாதுகாப்பு படை தலைமமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க, 21 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க ஆகியோர் இணைந்து அந்த பணப் பரிசுகளை குறித்த ஏழை மக்களுக்கு வழங்கினர்.
213 வது பிரிகேட் தளபதி மற்றும் படையினர் இந் நிகழ்ச்சி திட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கினைத்தனர்.